சொற்பதம் கடந்த தொல்லோன் - அருணாச்சலம் மகராஜன்

நம்முடைய மரபில் தெய்வங்கள் வந்து எழுதிய நூல்கள் நானறிய இரண்டு. முதலாவது வியாசர் சொல்லச் சொல்ல யானை முகக் கடவுளும், கணங்களின்‌ அதிபதியுமான கணபதி தன் ஒற்றைக் கொம்பை முறித்து எழுதிய மகாபாரதம். இரண்டாவது நூல் மானுடன் தெய்வத்துக்கு உரைத்தது எனப் பெயர் பெற்ற திருவாசகம். தான் அனுபவித்த தெய்வ அனுபூதியை, இறையருள் என்னும் வானப் பேரியாற்றில் பக்தர்கள் இறங்கி திளைக்க ஏதுவான துறைகள் என வந்த ஆலயங்கள் தோறும் சென்று நிறைப்பதையே தன்னறமாகக் கொண்டு வாழ்ந்து வந்த வாதவூரடிகளான மாணிக்கவாசகரை தில்லையில் ஆட்கொள்ள திருவுளம் கனிந்த அழகிய சிற்றம்பலத்தவரான ஈசன், அவர் அடைந்த இறையனுபவம் நம்மைப் போன்றவர்களுக்கெல்லாம் பயனுற விளங்கவேண்டும் என்ற அருளால் தாமே அந்தணரென வந்தமைந்து ஓலையில் மாணிக்கவாசகர் பாடக் கேட்டு எழுதியது என்பது தொன்மம். தில்லையில் இருந்த அந்த ஓலைச்சுவடி கர்நாடக நவாபின் படையெடுப்பின்போது நாகலிங்க அடிகளால் பாண்டிச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டு, பாண்டிச்சேரி அம்பலத்தாடி மடத்தில் நடராஜரின் பாதத்துக்கு அருகில் சுமார் ஒன்றரை அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட வெள்ளிப்பேழையில் வைத்து பாதுகாக்கப் பட்டு வருவதாக தமிழ் விக்கி கூறுகிறது.

வேதங்கள் தெய்வத்திடம் இருந்து தோன்றின‌ என நம்முடைய மதங்களும், தரிசனங்களும் சொன்னாலும் தொன்மமென, கதையென நிலை பெற்றவை இவையிரண்டுமே. ஏன் இவை இரண்டிற்கு மட்டும் இறையே வந்து ஏடெழுத வேண்டும்? அம்மட்டிலும் இவை இரண்டிற்கும் என்ன தான் சிறப்பு? மானுடத்திற்கு நலம் பயக்கும் எத்தனையோ நூல்கள் இருக்க இவை இரண்டிற்கு மட்டும் ஏன் மகனும், தந்தையும் வந்து எழுத வேண்டும்? இத்தனைக்கும் இரண்டின் நோக்கங்களும், வடிவ அமைப்பும், கூறு முறைகளும், மூல மொழிகளும், உருவான காலகட்டங்களும், உள்ளுறை தத்துவங்களும், தரிசனங்களும் வெவ்வேறு. இருந்தும் ஏன் இவையிரண்டிற்கு மட்டும் இந்த சிறப்பு?

மகாபாரதம் காலங்காலமாக மானுடம் வாழ்க்கை, நெறி, அறம், ஊழ், தெய்வம் என மீள மீள எழுப்பிக் கொள்ளும் கேள்விகளுக்கு இவையனைத்தும் முயங்கிய, முரண்பட்ட, மோதிய ஒரு பெரும் போரின் பின்னணியில் ஒரு தரிசனத்தை முன்வைக்கிறது. இவை மானுடம் எக்காலத்திலும் எழுப்பிக் கொள்பவை. கால மாற்றங்களுக்கு ஏற்ப பதில்கள் மாறிக் கொண்டே தான் இருக்கும். ஆகவே தான் காலங்காலமாக மறுஆக்கம் செய்யவும் படும். மூல பாரதம் இவ்வுலகம் நன்மை, தீமை, பலவான், பலவீனன், ஆண்டோர், ஒடுக்கப்பட்டோர், ஏற்பு, புறக்கணிப்பு போன்ற இருமைகளில் நல்லவை மட்டுமே நிலைபெற இயலாது, அல்லவையும் இணைந்த சமநிலையே இப்புவியில் உயிர்க்குலம் தங்கி வாழ தேவையானது என்பதை, அதன் ஆசிரியர் தன் கண் முன்பே தன் குருதி சிந்தி அழிவதை பார்த்து அடைந்த தரிசனமாக முன்வைத்தது. ஆனால் இக்காலத்திற்கு அந்த பதில் மட்டுமே போதுமானதாக இல்லை. ஏனெனில் மூல பாரதத்தின் அந்த தரிசனத்தை இப்பாரதப் பெருநிலம் ஏற்றுக் கொண்டு விட்டிருந்தது. அதனால் தான் ஒரு பெரும் மாயக்கணத்தில் ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலான மன்னராட்சி முறையில் ஊறியிருந்த பாரதவர்ஷம் சட்டென மக்களாட்சி முறையை முழுமனதாக ஏற்றுக் கொண்டது. ஆம் நாம் நன்மையையும், தீமையையும் நாடி நலம் புரிந்து அதனதன் தன்மையால் ஆளப்படும் என தெரிந்து வினையாடினோம். அன்றைய மன்னராட்சியில் அடிப்படை அதிகார அலகு குலங்கள். குடித்தலைவர்களும், குலத்தலைவர்களும் மன்னனைக் கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்தனர். எனவே அன்றைய கேள்விகளுக்கான பதில்கள் குடி, குலம் என தொகையான மக்கட் கூட்டத்தைப் பொறுத்தனவாக இருந்தன. இன்று மக்களதிகாரத்தில் அடிப்படை அலகாக அமைவது தனிமனிதன் தான். எனில் இன்றைய கேள்விகள் தனிமனிதனைச் சார்ந்தல்லவா எழுப்பிக் கொள்ளப்பட வேண்டும்? ஆகவே மகாபாரதத்திற்கு ஒரு மறு ஆக்கம் தேவைப்படுகின்றது. அதே கேளிவிகள் தாம். ஆனால் அவை எழுப்பப்பட வேண்டிய தளம் இன்னும் நுண்மையானது. அத்தகையதோர் மறுஆக்கமே வெண்முரசு. வெண்முரசு இந்த கேள்விகளுக்குத் தரும் பதிலென கிருஷ்ணன் முன்வைத்த மகாநாராயண வேதமான வேதமுடிபு என்னும் வேதாந்தத்தை முதன்மை தரிசனமாக முன்வைக்கிறது. ஒவ்வொரு மனிதனின் மீட்சிக்கான, விடுதலைக்கான, ஆனந்தப் பெருநிலை அடைவதற்கான வழியென வேதாந்தத்தை முன்வைக்கிறது. தனிமனிதனின் அன்றாடத்தின் தளமான சாமானியத்தில் விழைவினால் உந்தப்படாத, விளைவு பற்றிய கருத்து இல்லாத, செய்வதை மட்டுமே முதன்மையாகக் கொண்ட, செய்வதில் வெளிப்படும் சுயத்தையே தன்னறமாகக் கொண்ட செயல் என்பதை அடிப்படை அலகாக முன்வைக்கிறது வேதமுடிபு. ஆனால் தனிமனிதனின் அன்றாடம் என்பது அவன் வாழ்வின் மீச்சிறு பகுதி. அது அவன் நனவுள்ளம் நிகழ்த்துவது. ஆனால் மனித மனம் இன்னும் ஆழமானது. கனவுள்ளம், ஆழுள்ளம், கூட்டு நனவிலி என அதன் அடுக்குகள் நீளும். இவை நிகழும் தளங்களை விசேஷம் என்கிறது வேதாந்தம். அங்கே ஆழ்ந்து செல்லச் செல்ல மனதின் தன்னுணர்வு சிதறடிக்கப்படும். ஆனால் அந்த இருள் சூழ் ஆழ்பயணமே மனிதன் அறிந்து விடுதலை கொள்ளச் சாத்தியமான ஒரே வழி. அவ்விருள் என்பது சாதாரணமான ஒளியின்மையால் உருவாகும் இருள் அல்ல. முற்றிருள். யோக இருள். அந்த இருளில் ஒளியூட்டும் நிலவுகளென தன்னுணர்வும், கூடவே அதைக் கைபிடித்து வழிநடத்தும் குருவருளும் அமையும். இதையே யோகியர் அறியும் இருளில் இரு நிலவுகள் என கவித்துவமாக வகுத்தனர் நம் முன்னோர். மகாபாரதத்தில் இவ்விருளில் பயணித்து அறிந்து மீண்ட யோகியர் இருவரின் கதை மிக மென்மையாக வந்து செல்கிறது. அவர்கள் நர, நாராயணர்களான அர்ஜுனனும், கிருஷ்ணனுமே. அவர்களின் இந்த யோகம் பற்றிய பகுதிகளையும் உள்ளடக்கியதே மகாபாரதம் என்னும் காவியம். வெண்முரசு இப்பகுதிகளை மிக விரிவாக மறு ஆக்கம் செய்கிறது. காவியத்தின் வழி அறிபவர்களுக்கு குரு என்ற ஒருவர் தேவையில்லை. காவியத்தின் இந்த பயணத்தை வாசிப்பவர்கள் தாங்களும் அந்த இருளில் ஒரு குறிப்பிட்ட தூரம், அதாவது தன்னுணர்வு மட்டும் துணையிருக்கும் கனவுள்ளம் வரை செல்ல முடியும். ஆதியை அறியவும் கூடும். எனவே காவியத்தினூடான பயணத்திற்கு ஒரு நிலவு தான் வழிகாட்டும். அவ்வாறு மானுட கணங்கள் ஆதியை அறிய வழிகாட்டுகிறது என்பதாலேயே அந்த பாரதத்தை கணங்களின் நாயகனான கணபதி எழுதினார். காவியத்தில் இருப்பது ஒரு நிலவு என்பதையே கரிய யானையில் வளைந்த பிறையென வெளித்தெரியும் இரு கொம்புகளில் ஒன்றை ஒடித்து எழுதினார் ஆனைமுகன் கடவுள். 

அறிவது மட்டுமே உண்மையான விடுதலை அல்ல. ஆதலே மெய்யான விடுதலை, பேரின்பப் பெருநிலை. எதாக ஆவது? பிரம்மம் என பதிலிறுக்கிறது வேதாந்தம். இந்த பிரம்மம் என்னும் கருதுகோளின்‌ மூலம் என‌ ரிக் வேதத்தின் நாஸதீய சூக்தம் எனப்படும் சிருஷ்டிகீதத்தைச் சொல்லலாம். ஆதியில் இருந்த ஒன்றேயான அது தன் முடிவற்ற தவத்தால் ஒரு இருப்பென(சத்) ஆனது. அந்த இருப்பில் தோன்றிய இச்சையால், திரிபை, இன்மையை (அசத்) உருவாக்கியது. அதன் பிறகே பிரபஞ்சம் பிறந்தது. ஆனால் இவற்றை உற்பித்த அதை யார் படைத்தார்கள் என்பதை ஆகாய வடிவான அதுவே அறியும் அல்லது அதுவும் அறியாது என ஒரு வகை ஜடவாதத்தை ஒத்த கருத்துருவை முன்வைத்தது அப்பாடல். வேதாந்தம் அந்த கருத்துருவை பிரம்மம் என விரித்துக் கொண்டது. அனைத்துமே பிரம்மத்தின் வடிவங்களே என உணர்வதே, அறிவது அல்ல, உணர்ந்து ஆவதே உச்சம். அதுவே யோகப் பெருநிலை. ஆனால் அது ஊழ்கம் பயின்று யோகம் கனிந்து எய்தக் கூடியது. கட்டாயம் குருவும், குருவின் அருளும் தேவை. அனைவருக்குமான பாதை அல்ல அது. காட்டில் தனித்துச் செல்கையில் கையில் வில்லுடன் வந்து நிற்கும் காட்டாளனை நேருக்கு நேர் நின்று பொருதும் அச்சமற்றவருக்கானது அப்பாதை. இருளென சூழ்ந்த மதகரியை வென்று, பிளந்து, தோலுரித்து நின்றாடும் பெம்மானுக்குரியது அந்தப் பாதை. 

அப்படியாயின் அது ஆணுக்கான பாதை மட்டும் தானா? சாமானியரான எனக்கும், உங்களுக்குமான பாதை இல்லையா? அப்படியெனில் பிற உயிர்க்கு தங்களுக்கு உய்வே இல்லையா? அவற்றிற்கான மெய்யறிவின் பாதை தான் என்ன?

இக்கேள்விகளுக்கான பதிலை வேதாந்தம் வேதத்தின்‌ துணை கொண்டு, மானுட ஆன்மா பிறப்பின் தொடர் சங்கிலியில், ஏதேனும் ஒன்றில் யோகியாகி அப்பயணத்தை நிகழ்த்தி “நானே பிரம்மம்” என ஆவதன் சாத்தியத்தையே முன் வைக்கும். இப்போது மேலும் சில கேள்விகள் எழுந்து வரும்.  அனைத்தும் பிரம்மம்‌ எனில் ஆன்மாக்கள் என்பவை எவை? ஆன்மா என்பது மனிதப் பிறவிக்கு மட்டுமானதா? விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் ஆன்மா இல்லையா? ஒருவேளை மனிதருக்கு மட்டுமே ஆன்மா எனக் கொண்டாலும் வேதாந்தத்தை ஏற்று ஒழுகுபவர் அல்லாத மானுடருக்கு உய்வு இல்லையா? மானுடனாக வரும் ஆன்மா அதற்கு முன்பு என்னவாக இருந்தது? இறப்பிற்கு பின் என்னவாகிறது?

இந்த கேள்விகளை பின்னாளில் எதிர்கொண்ட ஞானியர் ஒவ்வொரு வகையில் தத்தமது தரிசனங்களை முன்வைத்தனர். சங்கரர் அத்வைதத்தையும், ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தையும், மத்வர் துவைதத்தையும், நிம்பார்க்கர் துவைதாத்வைதத்தையும், வல்லபர் சுத்தாத்வைதத்தையும் முன்வைத்தனர். இவையனைத்துமே பிரம்மம் என்னும் வேதாந்த கருதுகோளை அடிப்படையாகக் கொண்டவை. எனவே ஆன்மா என்பதையும் பிரம்மத்தின் திரிபாகக் கண்டவை. ஆனால் ஒட்டு மொத்த தாவர சங்கமத்தையும் (நிலையாக நிற்கும் தாவரம் தவிர்த்த அனைத்து நகரும் உயிர்த்தொகையே (ஜ)சங்கமம் எனப்படுவது) உள்ளடக்கி அவையனைத்திற்கும் உய்தலுக்குண்டான வழியைக் காட்டிய தரிசனம் என்றால் அது சைவ சித்தாந்தம் தான். 

பிற அனைத்தும் வேதத்தின் அந்தம் என்ற வகையில் வேதமுடிபு எனப்படுகையில் இது மட்டுமே சித்தத்தின் அந்தம் என்ற வகையில் சிந்தித்து, ஊழ்கத்தில் ஆழ்ந்தறிந்து, யோகத்தில் எண்ணமென்று ஆகிவந்த எண்ணத்தின்முடிபு எனப்படுகிறது. நம்மில் எழும் எண்ணங்களின்‌ ஊற்று நாம் அறிய‌ இயலாதது. எங்கிருந்து அவை நம் உள்ளத்துள் வந்தன என்பதையும் நாம் அறிய இயலாதது. அது அனைத்துயிர்களின் இணைவார் கூட்டுநனவிலியில் இருந்து கூட வரலாம். எனவே தான் எண்ணத்தின் முடிபு என்பதை முடிந்தமுடிபாகவும் கொள்ளலாம். இந்த எண்ணத்தைச் சார்ந்த தன்மையே சைவ சித்தாந்தத்தை பிற வேதாந்தங்களில் இருந்து தனித்துவமானதாக்குகிறது. சைவ சித்தாந்தம் எவ்வாறு இக்கேள்விகளை அணுகுகிறது?

அறிவியலின் துவக்கத்தில் பகுக்க இயலாத துகள் என‌ அணு இருந்தது. அதன் பின் அதை நேர் மின், எதிர் மின், மின்னிலி என மூன்று துணை அணுத்துகள்களால் ஆனது எனக் கண்டறிந்தது அறிவியல். இன்று அதையும் மேலும் பகுத்து க்வார்க்குகள், ஹிக்ஸ் போஸான் என்னும் கடவுள் துகள் என மேலும் பகுத்துக் கொண்டிருக்கிறது. அதைப் போன்றே சைவசித்தாந்தம் பிரம்மம் எனும் கருதுகோளை மேலும் மூன்றாக பதி, பசு, பாசம்‌ என மூன்றாகப் பிரிக்கிறது. இவை ஒவ்வொன்றையும் இன்னும் மூன்றாக பின்வருமாறு பிரிக்கிறது. பதி என்னும் தலைவனின் மூன்று ரூபங்கள் – அருவம், அருவுருவம், உருவம். பசு என்னும் ஆன்மாவின் மூன்று வகையினர் – சகலர், பிரளயகலர், விஞ்ஞானகலர். பாசம் அல்லது மலம் எனப்படுவது ஆணவம், கன்மம், மாயை என மூன்று. இவற்றிலும் கர்மம் எனப்படும் கன்மம் பிரார்த்தம்(முன்வினை), சஞ்சிதம்(நிகழ்வினை), ஆகாமியம்(வருவினை) என மூன்று. மாயையும் சுத்த(இருப்பு)மாயை, அசுத்த(இன்மை, பிரளயம்)மாயை, பிரகிருதி(இயற்கை)மாயை என மூன்று.

பதியின் மூன்று‌ ரூபங்களுக்கும் மூன்று பெயர்களை சைவ சித்தாந்தம் அளிக்கிறது. அருவ ரூபம் சிவன் எனவும், அருவுருவம் சதாசிவன் எனவும், உருவ ரூபம் மகேஸ்வரன் எனவும் அழைக்கப்படும். இந்த அருவமான சிவன் அநாதியானவன். காலாதீதமானவன். உருவேயற்ற‌ அவனே, உருவேயற்ற முதற்காரணமாகிய சுத்தமாயையில் துடியால் (தமருகம்) ஒரு நாதத்தை உருவாக்குகிறான். நாதம் அசைவென பரவுகிறது. அசைவில் உறையும் அனல் அவனில் சக்தியென கூடுகிறாள். அசைவு இருப்பென வெளிப்படுகையிலேயே, இன்மைக்கான காரணமும் ஆகிறது. இன்மையென, பிரளயமென திரியும் சுத்தமாயை அசுத்தமாயை ஆகிறது. அங்கே அனந்தேஸ்வரனாக அசைவை ஆடலாக்குகிறது சிவம். அசுத்த மாயையின் ஆடல் பிரகிருதி என்னும் இயற்கையைத் தோற்றுவிக்கிறது. இன்மையெனும்‌ மாயையில் இருந்தே உருவானதால் இயற்கையும் மாயையே. இயற்கை உருவானதுமே அவற்றைப் படைக்க, காக்க, அழிக்க பிரம்மன் எனும் வேதியனும், மாலவன் என்னும் விஷ்ணுவும், ஊழி பெயர்க்கும் உருத்திரரும் உருவாகிறார்கள். ஒன்று, பத்து, நூறு கோடியென உருண்டை உருண்டையாகப் பல்கிப் பெருகிப் பரவுகிறது அண்டம். ஒவ்வோர் உருண்டைக்கும் முத்தொழிலோர் பிறந்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் இவையனைத்துமே சிவத்தின் ஆடல். இப்படிப் பரவுவது உருவான அதே வழியிலே ஒடுங்கவும் கூடும். எப்போது ஒடுங்க வேண்டுமென முடிவெடுப்பதும் அந்த ஆடலின் நியதியே. ஒடுங்கியது மீளவும் பரவிப் பெருக ஒரு ஓயாத சுழற்சியென, ஆனந்த நடனத்தில் அமைந்துள்ளது சிவம். இந்த ஆடலை நாம் அறிய இயலுமா? எனவே தான் ஆடும் சிவத்தின் கோவைப் பழம் போன்ற செவ்வுதடுகளில் குமிண்சிரிப்பு இருக்கிறது எனப் பாடுகிறார் திருநாவுக்கரசர். குறும்புச் சிரிப்புடன் ஆடுகிறான் சிவன். சிவத்தின் இந்த படைத்துப் பெருக்கும் தன்மையை திருவாசகத்தின் திருவண்டப்பகுதியின் முதல் இருபத்தெட்டு வரிகளும் சுட்டி நிற்கின்றன. திருவண்டப் பகுதி மாணிக்கவாசகர் கண்ட சிவனின் புடவிநிறைக்காட்சியின் விரிவான விவரிப்பே. எண்ணிறந்த நட்சத்திரங்களும், கோள்களும் உருண்ட கோளங்களாய் இருக்கும் அண்டத்தின் ஒரு பகுதியை அவர் வீட்டின் கூரையில் இருக்கும் துளையின் வழியாக உள்நுழையும் சூரிய ஒளிக் குழாயில் அலைவுறும் துகள்களுக்கு ஒப்பாக்குவதில் இருந்து அவர் கண்ட இறைக் காட்சியின் தெளிவை நாம் உய்த்தறியலாம். மணிவாசகரும் சிவனின் ஆடலை வியக்கிறார். இப்படி ஓயாது சுழன்று ஆடு கையிலும் உதட்டில் குறும்புச் சிரிப்பை வைத்திருப்பவன் இளையோனாத்தானே இருக்க முடியும் என்பதை

“கொட்கப் பெயர்க்கும் குழகன்” என திருநாவுக்கரசர் கூறிய குறும்புச் சிரிப்பை இன்னும் ஒரு படி மேல் எடுத்துச் செல்கிறார். 

பிரபஞ்சத் தோற்றத்திற்கு சிவத்தையும், மாயையையும் வைத்து பதிலிறுத்த சைவ சித்தாந்தம் ஆன்மாக்களை பசு என அழைக்கிறது. பதியைப் போலவே பசுக்களும் அநாதி ஆனவையே. இவையும் சூட்சமுமாக, அருவமாக சுத்த மாயையில் இருந்தவையே. ஆடலென சிவம் துவங்குகையில் எண்ணிறந்த ஆன்மாக்களும் தத்தமதான பயணத்தைத் தொடர்கின்றன. சைவ சித்தாந்தம் நால்வகைப் பிறப்போடு ஏழ்வகை இருப்பை ஆன்மாக்களுக்கு வரையறுக்கிறது. முட்டையில் இருந்து பிறக்கும் அண்டசம், வெள்ளைப் பிசினை இழுத்தால் உருவாகும் இன்னொரு பிசினைப் போல் எளிய, சிறிய செல்லுடல்களின் பிரிவில் இருந்து பிறக்கும் ஸ்வேதசம் (ஸ்வேதம் என்றால் வெண்மை. பெரும்பாலும் புழுக்கள் மற்றும் ஒரு செல்லுயிரிதளுக்கு இத்தகைய பிறப்பு இருக்கும். கூட்டுப் புழு பூச்சியாக மாறுவதைக் கூட இவ்வகையில் சேர்த்துக்கொள்ளலாம்), வேர், கிழங்கு ஆகியவற்றில் இருந்து பிறக்கும் உற்பிச்சம் மற்றும் கருவில் இருந்து பிறக்கும் சராயுசம் என பிறப்பு நான்கு. இவ்வாறு பிறக்கும் வகையே யோனி பேதம் எனப்படும். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன மற்றும் தாவரம் என இருப்பு ஏழு.

பசு பதியோடு சேர்ந்திருத்தலே முக்தி, பேரின்பப் பெருநிலை. ஆனால் அந்த பசு என்னும் ஆன்மா மும்மலங்களான பாசத்தால் கட்டுண்டு பதியிடம் இருந்து விலகி இருக்கிறது. ஆன்மாவின் நோக்கமே மலங்களறுத்து பதியோடு ஒன்றல் தான். ஆன்மாவின் உச்சம் என்பது “சிவமே யாம்” என‌ ஆதலே. ஆன்மா தான் கொண்டிருக்கும் ஆணவம் மற்றும் பிறப்புகள் தோறும் சேர்த்துக் கொண்ட கர்மங்கள் ஆகியவற்றால் ஒரு தொடர்ச்சியான பிறப்பிறப்பு சுழலில் இருக்கின்றன. எத்தனை பிறப்புகள் ஒரு ஆன்மா எடுக்கக்கூடும்? எண்பத்தி நான்கு நூறாயிரம் யோனி பேதங்கள் ஒரு ஆன்மாவிற்கு சாத்தியம். இதையே மாணிக்கவாசகர்,

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்”, எனப் பெருமூச்செறிகிறார். 

ஆன்மாக்கள் தங்களது பிறவிகள் தோறும், அவை வெவ்வேறு சமய நெறிகளைக் கைக்கொண்ட போதும் கொஞ்சம் கொஞ்சமாக சைவ நெறிக்குள் பிறவிப் சுழலில் வந்து, பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனை அறிந்து உய்யலாம். சிவமானது ஒவ்வொரு ஆன்மாவையும் தன்பால் அழைத்து உய்விக்கும் பெருங்கருணையுடையது என்பதை 

“நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” என விளம்புகிறார் மாணிக்கவாசகர். 

ஒவ்வொரு ஆன்மாவையும் அவர் சிவக்காட்சியைக் காண அழைக்கிறார். 

“முன்னோன் காண்க முழுதோன் காண்க

தன்நேர் இல்லோன் தானே காண்க 


ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க

கானப் புலியுரி அரையோன் காண்க

நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்

ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்

இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க 


அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க

பரமன் காண்க பழையோன் காண்க

பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க

அற்புதன் காண்க அநேகன் காண்க

சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க


சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க

பத்தி வலையில் படுவோன் காண்க

ஒருவன் என்னும் ஒருவன் காண்க

விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க

அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க


இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க

அரியதில் அரிய அரியோன் காண்க

மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க

நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க

மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க


அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க

பந்தமும் வீடும் படைப்போன் காண்க

நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க

கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க

யாவரும் பெற உறும் ஈசன் காண்க


தேவரும் அறியாச் சிவனே காண்க

பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க

கண்ணால் யானும் கண்டேன் காண்க

அருள்நனி சுரக்கும் அமுதே காண்க

கருணையின் பெருமை கண்டேன் காண்க


புவனியில் சேவடி தீண்டினன் காண்க

சிவன் என யானும் தேறினன் காண்க

அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க

குவளைக் கண்ணி கூறன் காண்க

அவளுந் தானும் உடனே காண்க”


சைவ சித்தாந்தத்தின் தத்துவ நீட்சிகளை மானுடர் அனைவருக்கும் புரியும் வகையில், சிவானுபவம் என்பதை அறியும் வகையில் வாதவூரடிகள் நமக்களித்ததே இந்த திருவாசகம். மானுடம் கண்டடைந்த மொழிகள் அனைத்திலும் அமைந்த சொற்கள் அனைத்தையும் கொட்டி விளக்கினாலும், விளக்க முடியாதவனாய் - சொற்பதம் கடந்த – மிக மிகப் பழமையான வான்  தொல்லோன், சித்தமும் செல்லா இயலாத தூரத்தில் இருக்கும் சேட்சியன் ஆன சிவன் நம் பக்தி என்னும் வலையில் தானே வந்து அகப்படுவான் என்ற வரிகளே மாணிக்கவாசகர் இத்தாவரசங்கமத்துள் எல்லாம் இருக்கும் அத்துணை உயிர்களுக்கும், ஆன்மாக்களுக்கும் அளிக்கும் செய்தி. நாயிற் கடையராய் நாம் இருந்தாலும் சிவன் என ஒருவன்‌ இருப்பதை நம் சித்தம் அறிந்தாலே போதும், தாயினும் சாலைப் பரிந்து நம் முக்திக்கு வழிகோலுவான் சிவன். அதைத் தன் வாழ்நாள் செய்தியாக, சிவனையே குருவாய் பெற்ற பெரும்பேறுடைய மாணிக்கவாசகர் திருவாசகமென வழங்கியிருக்கிறார். ஆன்மாக்கள் ஒவ்வொருவருக்கும் தன்னைக் காட்டி, மீட்க விரும்பும், ஆன்மாக்களைக் கட்டியிருக்கும் மும்மலங்களையும் அடியார்களின் இதயம் என்னும் சுடலையில் எரித்து நடனமிடும் நீறணி மேனியன், சொற்பதம் கடந்த அந்த தொல்லோன், அவன் அருளாலே ஆன்மாக்களை அவன் தாள் வணங்க வைக்கும் பேரருளாளன் ஆனதால், அவ்வாறு தான் ஆட்கொண்ட மாணிக்கவாசகரின் கூற்றை பசுக்களான ஆன்மாக்கள் அறியத் தரும் வகையில் தன் கைப்பட தானே எழுதினான் என்பதை விட திருவாசகத்தின் பெருமைக்கு வேறு சான்று வேண்டுமோ? 


திருச்சிற்றம்பலம்.


Comments

Popular posts from this blog

காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு

கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்