கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று

சூழ்வான்

மகனொடும், அறுவர்ஆனேம்; எம்முழை அன்பின்

வந்த

அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர்

ஆனேம்;

புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான்

நுந்தை.'




இராமன்  குகன் சுக்ரீவன் விபீடணன் ஆகியோரை தனது சகோதரர்களாக சேர்த்துச்சொல்லும் புகழ்பெற்ற கம்பனின் பாடல் இது. இராமன் தனது அன்புள்ளத்தால் தன் அருகனைவோரை தம்பியராக சேர்த்துக்கொண்டான். அதில் வேடனான குகனும், குரங்கினத்தவனாகிய சுக்ரீவனும், அரக்கனாகிய வீடணனும் உண்டு. அறத்தின்மூர்த்தியாகிய ராமனின் வரிசைப்படுத்தல் போல எளிதானது அல்ல சமயத்தின் குருமரபினரை வரிசைப்படுத்தல்.


காலம் ஏழாம் நூற்றாண்டு, பாண்டிய பல்லவ பேரரசுகள் தமிழகத்தை களப்பிரரிடமிருந்து மீட்டு ஆண்டுகொண்டிருந்த சமயம். சைவ சமயம் தமிழகத்தில் பரவலாக்கம் பெற்ற இந்த பக்தி இயக்க காலகட்டத்தில் முதன்மையான தொண்டர்களாக அப்பர் சம்பந்தர் இருவரும் இருந்தனர். முறையே அப்பர் தொண்டைநாட்டிலும், சம்பந்தர் சோழ நாட்டிலும் பிறந்தவர்கள். இருவரும் தமிழ்ப்பதிகங்களை பாடி ஊர்தோறும் பயணித்து சமயம் வளர்த்தனர். சிவபெருமானின் மறத்தையும் அருளையும் மொழியின் சுவையோடு தமிழகத்திற்கு அளித்தனர். பிற சமயங்களை பின்பற்றிய வேந்தர்களை சைவத்தின்பால் திருப்பினர். அக்காலத்தில் தமிழகத்தில் வளர்ந்துகொண்டிருந்த சமண சாக்கிய மதங்களின் கருத்துக்களை மறுத்து சைவத்துக்கான விழுமியங்களை மக்களுக்கு தொகுத்தளித்தனர். சமூகத்தின் வெவ்வேறு படிநிலைகளில் இருந்த எல்லாத்தரப்பினரையும் சைவத்துக்குள் கொண்டுவந்தனர். தமது காலத்தில் வாழ்ந்த அடியவர்களையும் முன்வாழ்ந்த நமிநந்தி போன்ற அடியவர்களையும் தமது பதிகங்களில் பாடினர். சிவனடியார்கள் தங்க மடங்களை நிறுவி அவர்களை பேணுதல் அறம் என்ற எண்ணத்தை சமூகத்துக்கு உணர்த்தினர். முதல் இருவரின் இந்த அரும்பணியானது தமிழகத்தில் சைவம் ஒரு பெருநெறியாக மாற உதவியது.  


இவர்கள் இருவரின் பின்வந்த சுந்தரர் காலம் எட்டாம் நூற்றாண்டு, அவர்காலத்தில் நிலைபெற்ற சைவத்தை வளர்க்க வேண்டியிருந்தது, தொகுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. சுந்தரர் தொண்டைநாட்டில் பிறந்து சோழநாட்டு திருவாரூரில் வாழ்ந்தவர். சேர மன்னனுடன் நட்பு கொண்டவர். மூன்றாவது அடியவரான சுந்தரர் அதுவரை இருந்த சிவனடியார்களை எல்லாம் தொகுத்து திருத்தொண்டத்தொகை பாடுகிறார். அவர்களோடு தொகை பாடிய சுந்தரர் அவர்தம் பெற்றோரையும் சேர்த்து 63 நாயன்மார்கள் என்று சைவத்தில் அடியவர் நிரை ஒன்று நிறுவப்பட்டுவிடுகிறது. பின்வந்த நம்பியாண்டார்நம்பி, இந்த தொண்டர்களின் கதையை புராணமாக பாடிய சேக்கிழார் ஆகியோர் இந்த வரிசையை மாற்றவோ அல்லது அவ்வரிசையில் புதிதாக யாரையும் சேர்க்கவோ முயலவில்லை. சைவ அடியார்களில் நாயன்மார் வரிசை என்பது இவர்களோடு நின்றுவிடுகிறது. இவர்கள் அனைத்து சிவாலயங்களிலும் சிலைகளாக நிறுவப்பட்டனர். அவர்தம் குருபூசை நாட்களில் சிறப்பாக வழிபடப்படுகின்றனர். நாயன்மார்களில் சம்பந்தர், அப்பர், சுந்தரரோடு காரைக்காலம்மை, அதிபத்தர் , சோமாசிமாறர் நாயனார் போன்றோருக்கு குருபூசை தவிர தனி விழாக்களும் உண்டு.


இந்த அனைத்திற்கும் பிறகு திருவாதவூரரான மாணிக்கவாசகர் பிறந்து சைவ அடியாராகின்றார். இவர் பிறந்தது பாண்டியநாடு, திருப்பெருந்துறை திருவண்ணாமலை முதலிய தலங்களில் தங்கி தில்லையில் முக்தி அடைகிறார். இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்கப்பட்ட ஒன்று.


சைவத்தில் பன்னிரு திருமுறைகள் என்பது ஒரு பனுவல் தொகுப்பு. இந்தப் பன்னிரு பகுதிகளை 27 சைவ அடியார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தமிழில் இயற்றியிருக்கிறார்கள். பதினோரு திருமுறை வரையிலான பகுதிகள் திருநாரையூரை சேர்ந்த நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டது. தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் ஆலயங்கள் ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடல்களில் குறிப்பிடப்படுவதால் நம்பியாண்டார் நம்பியின் காலம் பத்து மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக நிர்ணயிக்கப்படுகிறது. திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி மூவர் தேவாரத்திற்கு  அடுத்ததாக திருவாசகம் மற்றும் திருக்கோவையாரை எட்டாம் திருமுறையில்  வைத்ததன் மூலம் தேவார மூவருக்கு அடுத்து நான்காவதாக மாணிக்கவாசகருக்கு இவ்வரிசையில் ஓரிடத்தை ஏற்படுத்துகிறார். அவ்விடத்தில் திருமூலரோ, காரைக்காலம்மையோ ஏன் இல்லை என்ற கேள்வி முக்கியமானது.


பட்டினத்தார் காலம் பத்தாம் நூற்றாண்டு, அவர் தனது திருவிடைமருதூர் மும்மணிக்கோவையில் மாணிக்கவாசகரை குறிப்பிடுகிறார்.


மூன்று கோடி ஆன்ற முனிவரும்

வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்

தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும்

வித்தகப் பாடல் முத்திறத் தடியரும்

திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்...


இதன்படி பட்டினத்தாரே முறைவைப்பில் நான்காவதாக மாணிக்கவாசகரை சொல்வதைக்காணலாம். இவ்வாறு துவங்கியதன் இலக்கிய ஏற்பு திருமுறை தொகுத்த நம்பியின் காலம். இவ்வாறாக பாடல்களின் ஏற்பிற்கு பிறகே வாதவூரரின் கதையும் மீண்டு பேசப்படுகிறது, அக்காலத்தில் தோன்றிய திருவிளையாடற்புராணத்தில் மாணிக்கவாசகர் கதையும் சேர்க்கப்படுகின்றது, ஆவுடையார்கோவில் ஆலயம் பேராலயமாக மாறி அங்கு மாணிக்கவாசகருக்கு வழிபாடுகள் பெருகுகின்றன. மதுரையில் ஆவணிமூல திருவிழாவில் பிட்டுக்கு மண்சுமப்பதும் நரியை பரியாக  மாற்றும் விழாவும் நடக்கின்றன.

சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் ஒருவரான உமாபதி சிவாசாரியார் எழுதிய காப்புச் செய்யுள்களில் ஒன்றில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்  ஆகிய தேவார மூவரோடு மாணிக்கவாசகப்பெருமானையும்  ஒன்றாக இணைத்து வணங்குகிறார், இது நால்வர் துதி என்று வழங்கப்படுகிறது. இவரது  காலம் பதிமூன்றாம் நூற்றாண்டு. இன்று சமயக்குரவர் நால்வர் என சைவம் வகுத்துரைக்கும் இந்த நால்வரும் ஒருவரிசையில் வைக்கப்பட்ட காலம் இது.


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி

ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி

வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி

ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி


மரபான சைவர்களிடையே இந்த நால்வரையும் ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்றும், ஒருவரை உயர்த்தி மட்டும் கருத்துரைப்பது தவறு என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு விவாதங்களுக்குப் பிறகே இந்த நால்வரையும் ஒரே நிரையில் சைவம் கொண்டு வந்திருக்கின்றது என்று ஊகிக்க முடிகிறது. பதினொன்றாம் நூற்றாண்டில் கோவில்களில் திருவெம்பாவை பாடப்பட்ட செய்தி கல்வெட்டு மூலம் கிடைக்கின்றது. பின்னர் பாவையும் பள்ளியெழுச்சியும் கோவில்களில் பாடப்படுவது வழக்கமாக மாறியுள்ளது. சைவர்கள் ஆலயத்தில் பஞ்சபுராணம் பாடுகையில் தேவாரத்திற்குப்பின் இரண்டாவதாக திருவாசகம் ஒன்று பாடவேண்டும் என்பதும் மரபு. 


தமிழகத்தில் தேவாரப்பாடல்களின் செல்வாக்கு அளப்பரியது. அவை கோவிலில் பதிக விண்ணப்பம் செய்யத்துவங்கிய காலத்தின் துவக்கம் தான் மாணிக்கவாசகரின் காலம். மூவர் பெயரால் மடங்கள், ஊர்கள் முதலியவை தமிழகத்தில் இருந்தன. இன்றளவும் மூவர் பெயர்கள் தமிழ்ச்சமூகத்தில் பலருக்கு இடப்பட்டிருப்பது அதன் தொடர்ச்சியே. அதுபோல தேவார பாடல்களின் ஏற்பு சமூகத்தில் பலபடிநிலைகளாக அமைந்தது.  மூவரின் வழிவந்த அடியார்கள் இப்பாடல்களை கோவில்களில் பாடிப்பரவினர். அரசர்கள் நிவந்தங்கள் அளித்து பாடச்செய்தனர். துதிப்பாடல்களாகவும், இசைப்பாடல்களாகவும், நன்மை அளிக்கும் பாடல்களாகவும் இவை சமூகத்தில் நிலைபெற்றன. இவற்றை அடுத்து எழுந்த சைவப்பனுவல்களில் திருமுறையில் தொகுக்கப்பட்ட திருவாசகமும் திருமந்திரமும் தனித்தன்மை மிக்கவை. திருமந்திரம் பக்தி இலக்கியத்தில் இடம்பெற்றாலும் அது மேலதிகமான கருப்பொருள் கொண்டது, சூத்திரங்களாக மனதையும் உடலையும் இன்னும் அணுகிப்பார்க்க முயல்வது அது, சித்தர் இலக்கியத்தொகையிலும் வைக்கத்தக்கது. பக்தியை முதற்பொருளாகக்கொண்ட பனுவல் மட்டுமே அல்ல திருமந்திரம்.


மாறாக திருவாசகம் சைவ பக்தி இலக்கியத்தின் உச்சம், அது தன்னளவிலேயே இசைத்தன்மை கொண்ட பனுவலாகத்தான் தோன்றியிருக்கின்றது. அது தன்னை உருக்கிக்கொள்ளும் மனதின் வெளிப்பாடு, அகம் மறைந்து போதம் கடந்து பிதற்றலாக வெளிப்பட்ட இலக்கியம் இது. வாதவூரரின் இந்த அகஉருக்கமானது அதற்கு முன் சைவத்தில் எங்கிருந்தது? அப்பரிடம் தாச பாவத்தில் இருந்தது இந்த உருக்கம். இதுவே பின்னர் வைணவத்தில் ஒரு அடிப்படை அலகாக மாறிப்போனது. சம்பந்தரிடம் இந்த உருக்கம் ஒரு வேண்டுதலாக மட்டும் இருந்தது, சுந்தரரிடம் தனது வாழ்வின் அல்லல்களை சொல்லும் புலம்பல்களாக, கோபமாக  இருந்தது. இவற்றை மீறிய ஒரு தன்னழிதல் மாணிக்கவாசகருக்கு மட்டும் எப்படி சாத்தியப்பட்டது? அது வாழ்வின் உச்சத்திலிருந்து ஒரு அறைதல்கணமாக அனைத்தையும் புரிந்துகொண்டவனின் மனநிலை. அலைக்கழியும் பித்தனின் நிலை, தன் அகவெளியெங்கும் மாணிக்கவாசகர் எதை உணர்ந்தாரோ அதை திருவாசகமாக செய்திருக்கிறார்.  முதலில் படிப்பவரை துணுக்குறச்செய்வது, தன்னில் தோய்பவருக்கும் அப்பெருநிலையின் கீற்றோன்றை அருள்வது. இந்தத்தன்மையினால் தான் திருவாசகம் மக்களிடையே தேவாரம் தாண்டியும் சென்றடைந்திருக்க வேண்டும், ஒருவகையில் சுந்தரர் அடைக்கப்பாடிய அருளாளர் நிரையை மாணிக்கவாசகர் திறக்கப்பாடியது திருவாசகம்.    





வேறெந்த காரணங்களைத்தவிடவும் தனது பாடல்களின் இந்த கவித்தன்மையால்தான் மாணிக்கவாசகர் மக்களிடையே ஏற்பை பெற்றிருக்கிறார். அதுவே சிவவாக்கியருக்கு முன்னர் மாணிக்கவாசகரை  பட்டினத்தாரை சொல்லச்செய்கிறது. அதுவே நம்பியாண்டார் நம்பிக்கு மூவரின் பாடல்களுக்கு அடுத்ததாக திருவாசகத்தை சேர்க்கச்செய்கின்றது. அதுவே வள்ளலாரையும் ஜி யு போப்பையும் தன் இனிமையில்  தோயச்செய்கிறது, அதுவே புதுமைப்பித்தனை எழுத்தால் மாணிக்கவாசகனை தானென மாறி உழலச்செய்கிறது, இளையராஜாவை இசை கோர்க்கச்செய்கிறது, நான் பணியும் நாஞ்சில்நாடனை பின்னும் அகரமுதல்வனை தன்னை அதன் நீட்சியென உணரச்செய்கிறது.

Comments

Popular posts from this blog

காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு